பெரம்பலூர் ஆசிரியை மாயமான நாளில் எஸ்கேப்பானவர் ஏடிஎம்களில் பணம் எடுக்கிறார்… பெண்களுடன் ஜாலியா இருக்கிறார்… உல்லாச ஆசிரியரை தேடும் போலீஸ்

பெரம்பலூர்: பெரம்பலூரில் மாயமான மாற்றுதிறனாளி ஆசிரியை கதி என்னவென்று தெரியவில்லை. அதே நாளில் மாயமான சக ஆசிரியர் ஊர் ஊராக சுற்றி பல பெண்களுடன் உல்லாசமாக இருந்து வருவதாக வந்த தகவலின் பேரில் அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி கணிதபட்டதாரி ஆசிரியை தீபா(42). மாற்றுத்திறனாளியான இவர், தனது கணவரான இன்ஜினியர் பாலமுருகன் பயன்படுத்திய காருடன் கடந்த நவம்பர் 15ம் தேதி திடீரென மாயமானார். அதே பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியரான வெங்கடேசனையும் (44) அன்று முதல் காணவில்லை.

இதில் தகாத உறவு காரணமாக இருவரும் தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருகுடும்பத்தாரும் தனித்தனியாக கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் மற்றும் வி.களத்தூர் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கோவை பகுதியில் அனாதையாக நின்ற தீபா பயன்படுத்திய காரை மீட்டு போலீசார் பெரம்பலூர் கொண்டு வந்தனர். காரில் ரத்த கறை படிந்த சுத்தியல் இருந்ததால் ஆசிரியை தீபாவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்குமோ என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பெரம்பலூர் எஸ்பி ஷ்யாமளாதேவி உத்தரவின்பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது. கோவையில் பதுங்கி இருந்தபோது ஆசிரியர் வெங்கடேசன் தனது செல்போனில் இருந்து தொடர்புகொண்ட பாலியல் புரோக்கரான கோவை மதுக்கரை காந்தி நகரை சேர்ந்த மோகன் என்பவரை, பெரம்பலூர் அழைத்து வந்த வி.களத்தூர் போலீசார் கடந்த 3ம்தேதி பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.

இதுபற்றி தனிப்படை போலீசார் கூறுகையில், ‘மாயமான ஆசிரியர் வெங்கடேசன், தனது இருப்பிடத்தை போலீசார் அறிந்துவிடுவார்கள் என அவ்வப்போது சிம்கார்டுகளையும், தான் பதுங்கி இருக்கும் இடத்தையும் மாற்றிமாற்றி வருகிறார். இதனால் அவரை நெருங்குவதில் திடீரென சிக்கல் ஏற்பட்டுள்ளது. மதுரை, தேனி, கோவை உள்ளிட்ட இடங்களில் ஏடிஎம்களில் வெங்கடேசன் பணம் எடுத்தபோது அங்குள்ள சிசிடிவி காமிரா பதிவுகளில் ஆசிரியர் வெங்கடேசன் மட்டுமே பதிவாகி உள்ளார்.

தலைமறைவாக உள்ள ஆசிரியர் வெங்கடேசனை தொடர்பு கொண்டு பேசும் எண்களின் உரிமையாளர்களை நெருங்கி விசாரிக்கும்போது அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் என்பது தெரியவந்தது. தலைமறைவு ஆசிரியர் அவ்வப்போது ஏடிஎம்களில் பணத்தை எடுத்து பாலியல் பெண்களுடன் உல்லாசமாக இருந்து வருவதாக தெரிகிறது. ஆசிரியை மாயமான சம்பவத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. வெங்கடேசன் சிக்கினால் மட்டுமே, ஆசிரியை தீபா பற்றிய நிலை தெரியவரும் என்பதால், அவரை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறோம்’ என்றனர்.

The post பெரம்பலூர் ஆசிரியை மாயமான நாளில் எஸ்கேப்பானவர் ஏடிஎம்களில் பணம் எடுக்கிறார்… பெண்களுடன் ஜாலியா இருக்கிறார்… உல்லாச ஆசிரியரை தேடும் போலீஸ் appeared first on Dinakaran.

Related Stories: