பரமக்குடியில் மாடியில் இருந்து விழுந்து கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை: ஒரே நாளில் நடந்த சம்பவங்களால் உறவினர்கள் சோகம்

பரமக்குடி: பரமக்குடியில் மாடியிலிருந்து விழுந்து கணவர் இறந்த துக்கத்தில், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் நடந்த அடுத்தடுத்த சம்பவங்களால் உறவினர்கள் சோகமடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள நேரு நகரைச் சேர்ந்தவர் கற்பூரம் (எ) சுதாகர் (36). எலக்ட்ரீஷியன். இவரது மனைவி தாரணி காமாட்சி (26), மகன் ஹர்ஷித் (3). நேற்று முன்தினம் மாலை, பரமக்குடி பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு மாடி வீட்டின் ஜன்னலில் கொசுவலை அடிக்கும் பணியில் சுதாகர் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக முதல் மாடியிலிருந்து சுதாகர் தவறி கீழே விழுந்தார். இதில், தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் மயக்கமடைந்தார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை சுதாகர் உயிரிழந்தார். இதனையறிந்த தாரணி காமாட்சி கடும் மனவேதனையடைந்தார். சுதாகரின் உடலை பரமக்குடிக்கு கொண்டு வருவதற்குள், நேற்று மாலை தனது மகனை மாமியார் வீட்டில் விட்டுவிட்டு, வீட்டில் தூக்கிட்டு தாரணி காமாட்சி தற்கொலை செய்தார். ஒரே நாளில் கணவர் உயிரிழந்த துக்கத்தில் மனைவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரமக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பரமக்குடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பரமக்குடியில் மாடியில் இருந்து விழுந்து கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை: ஒரே நாளில் நடந்த சம்பவங்களால் உறவினர்கள் சோகம் appeared first on Dinakaran.

Related Stories: