விவசாயிகளிடம் இருந்து செப்டம்பர் 1ம் தேதி முதல் சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,450க்கு கொள்முதல் செய்யப்படும்: அமைச்சர் அறிவிப்பு

சென்னை: சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,450ம், பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,405க்கும் விவசாயிகளிடம் இருந்து வருகிற செப்டம்பர் 1ம் தேதி முதல் கொள்முதல் செய்யப்படும் என்று அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார். உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் 2002-2003 காரிப் பருவம் முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முகவராக செயல்பட்டு ஒவ்வொரு பருவத்திலும் அக்டோபர் 1ம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. நெல் விவசாயிகள் நலன் கருதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி அனுமதி பெற்றுத் தந்ததால் 2022-2023 காரிஃப் பருவத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

2023 – 24 காரிப் பருவத்தில் 31.07.2024 வரை 3200 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 3,85,943 விவசாயிகளிடம் இருந்து 33,24,166 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.7,277.77 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2024-2025 காரிஃப் பருவத்திற்கு சன்னரக நெல்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதார விலையான ரூ.2320 உடன் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.130 சேர்த்து சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,450 என்ற விலையிலும், பொதுரக நெல்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2300 உடன் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.105 சேர்த்து பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,405 என்ற விலையிலும் நெல் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் விவசாயிகளுக்கு தேவைப்படும் இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படும். ஆதலால், விவசாயிகள் 01.09.2024 முதல் புதிய கொள்முதல் விலையில் தங்களது நெல்லினை அரசு சார்பில் நடத்தப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்றுப் பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post விவசாயிகளிடம் இருந்து செப்டம்பர் 1ம் தேதி முதல் சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,450க்கு கொள்முதல் செய்யப்படும்: அமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: