10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் பழங்குடியினர் நலப்பள்ளிகள் சாதனை: தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 92.45% மற்றும் 95.15% தேர்ச்சி பெற்று பழங்குடியினர் நலப்பள்ளிகள் சாதனை படைத்துள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: பழங்குடியினர் நலத்துறையில் 212 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட ஆரம்பப் பள்ளிகள், 49 நடுநிலைப் பள்ளிகள், 31 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 28 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 320 பள்ளிகளில் 24,689 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரத்தினை உயர்த்திட சிறப்பு ஆசிரியர்கள் மூலம் மாலை நேர வகுப்புகள் உள்பட பல்வேறு முன்னெடுப்புகளை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் விளைவாக 2023-2024ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12 வகுப்பு பொது தேர்வில் முறையே 92.45% மற்றும் 95.15 % தேர்ச்சி பெற்று பழங்குடியினர் நலப்பள்ளிகள் சாதனை படைத்துள்ளன. 2023-2024ம் ஆண்டில் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் 99% மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்.

ஜிஎல்ஏடி, சியூஇடி மற்றும் என்ஐஎப்டி தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சிகள் மூலம் 9 பழங்குடியின மாணவர்களும், 2024-2025ம் ஆண்டு 7 பழங்குடியின மாணவர்களும் தேசிய அளவிலான உயர்கல்வி நிறுவனங்களான திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சி தேசிய சட்டப் பல்கலைக்கழகம், சென்னை தரமணி மற்றும் பெங்களூரு தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றில் சேர்ந்துள்ளனர். மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற தகுதியுள்ள பழங்குடியினர் இளைஞர்களுக்கு 10ம் தேதி முதல் சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, நாமக்கல், திருவண்ணாமலை, திருச்சி, கோவை, கன்னியாகுமரி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் இணைய வழி சிறப்புப் பயிற்சி துவங்கப்பட உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் பழங்குடியினர் நலப்பள்ளிகள் சாதனை: தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: