சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மருத்துவ படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: 27ம் தேதி கடைசி நாள்

சென்னை: சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மருத்துவ படிப்புக்கு நாளை முதல் வரும் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஓமியோபதித் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் சுயநிதி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்திற்கும், 2024-2025ம் கல்வியாண்டிற்கான பி.ஏ.எம்.எஸ், பி.எஸ்.எம்.எஸ், பி.எச்.எம்.எஸ், பி.யு.எம்.எஸ் மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை பெற அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவத்தை ”www.tnhealth.tn.gov.in” என்ற வலைத்தள முகவரி மூலமாக நாளை முதல் முதல் 27ம் தேதி மாலை 5 மணி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், தபால், கூரியர் சேவை வாயிலாக பெறவோ அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ கடைசி நாள் வரும் 27ம் தேதி மாலை 5.30 மணியாகும். அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவங்களை ”செயலர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம், அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-600106 என்ற முகவரியில் சமர்ப்பிக்கலாம். தேசியத் தேர்வு முகமையால் நடத்தப்பெறும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (இளநிலை மருத்துவம்) 2024-ல் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே பி.ஏ.எம்.எஸ், பி.எஸ்.எம்.எஸ், பி.எச்.எம்.எஸ், பி.யு.எம்.எஸ் மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும். கலந்தாய்வை பொறுத்தவரை நேர்முகமாக மட்டுமே நடைபெறும்.

The post சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மருத்துவ படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: 27ம் தேதி கடைசி நாள் appeared first on Dinakaran.

Related Stories: