நெல்லை மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் 100 ஏக்கரில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் சுமார் 100 ஏக்கரில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பல இடங்களில் கொட்டித் தீர்த்த மழையால் விளைநிலங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. மானூர் தாலுகா பல்லிக்கோட்டை பஞ்சாயத்து பகுதியில் சுமார் 500 ஏக்கரில் விவசாயிகள் நெற்பயிர் பயிரிட்டு உள்ளனர்.

பள்ளமடை பெரியகுளம் பாசனத்தில் பயிர்கள் செழித்து வளர்ந்திருந்தன. தற்போது அறுவடைக்கு தயாராகி இருந்த நிலையில், சில நாட்களாக பெய்த மழையில், 100 ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீர் மூழ்கி சேதமானது. மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள், முளைக்க துவங்கியதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.சேதமடைந்த நெற்பயிர்களை வேளாண் துறை அதிகாரிகள், நெல்லை மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள், ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டு சென்றுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து பள்ளடை பெரியகுளம் விவசாயிகள் சங்க தலைவர் சேகர் கூறுகையில், பள்ளமடை பெரிய குளம் பாசன பரப்பில் பிசான 2ம் பூ சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் காணப்பட்டது. கடந்த சில நாட்கள் பெய்த கனமழையில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளை விட்டுள்ளது. இதனால் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்தும் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வீணானதால் விவசாயிகளுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் போதிய இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

 

The post நெல்லை மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் 100 ஏக்கரில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது appeared first on Dinakaran.

Related Stories: