பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கியதாக புகார்: அதிமுக பகுதி செயலாளர், தாசில்தார் வீடு உள்பட 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை: பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் பேரில், அதிமுக பகுதி செயலாளர், தாசில்தார், சர்வே துணை ஆய்வாளர் வீடுகள் என சென்னை உள்பட 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர். சென்னை, வேளச்சேரியில் அரசுக்கு சொந்தமாக 1,200 சதுரஅடி நிலம் உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு நகர்ப்புற நில உச்ச வரம்பு சட்டத்தின் கீழ் அரசுக்கு சொந்தமாக இருந்த 1,200 சதுரஅடி இடத்தை போலி ஆவணங்கள் மூலம் வேளச்சேரி அதிமுக பகுதி செயலாளர் எம்.ஏ.மூர்த்தி மற்றும் அவரது மனைவி சுதா ஆகியோர் கடந்த 2021ம் ஆண்டு அபகரித்துவிட்டதாகவும், இதற்கு வேளச்சேரியின் அப்போதைய தாசில்தார் மற்றும் அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த புகார் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அதிமுக பகுதி செயலாளர் மூர்த்தி, அவரது மனைவி சுதா ஆகியோர் அரசு இடத்தை அபகரித்திருப்பதும், அதற்கு அரசு அதிகாரிகளே துணை போய் இருப்பதும் தெரியவந்தது. மேலும், இந்த இடத்தின் பட்டா மாறுதல் உள்ளிட்ட பணிகளை 3 மணி நேரத்தில் செய்து, அதிகாரிகள் லஞ்சம் பெற்றிருப்பதும் உறுதியானது. இதையடுத்து, வேளச்சேரி தாசில்தாராக பணியாற்றிய மணிசேகர் (43) தற்போது அம்பத்தூர் சிறப்பு தாசில்தார்-2 ஆக உள்ளார். மேலும் சர்வே துணை ஆய்வாளராக பணியாற்றிய லோகநாதன் (37). இவர் தற்போது கோவை மாவட்டம் சூலூரில் பணியாற்றுகிறார், கள சர்வேயராக பணியாற்றிய சந்தோஷ்குமார் (37) இவர் தற்போது மாம்பலம் சர்வே உதவி ஆய்வாளராக உள்ளார்.

மூத்த வரைபடவாளராக பணியாற்றிய தேவி (46), வேளச்சேரி ஆண்டாள் நகர் விரிவாக்கம் 3-வது தெருவை சேர்ந்த அதிமுக பகுதி செயலாளர் எம்.ஏ. மூர்த்தி (46), அவரது மனைவி சுதா ஆகிய 6 பேர் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், சென்னை வேளச்சேரி பரணி தெருவில் உள்ள சிறப்பு தாசில்தார் மணிசேகரின் வீடு, மேற்கு மாம்பலத்தில் உள்ள சந்தோஷ் குமாரின் வீடு, திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள தேவி, அதிமுக பகுதி செயலாளர் எம்.ஏ. மூர்த்தியின் வேளச்சேரி இல்லம் மற்றும் கோவை மாவட்டம் வடகுபாளையத்தில் உள்ள லோகநாதன் வீடு என ஆகிய 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனை முழுமையாக முடிவடைந்த பிறகே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல் தெரியவரும் என போலீசார் தகவல் தெரிவித்தனர்.

The post பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கியதாக புகார்: அதிமுக பகுதி செயலாளர், தாசில்தார் வீடு உள்பட 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை appeared first on Dinakaran.

Related Stories: