×

அதிமுக மாஜிக்களை தொடர்ந்து சந்திப்பதால் மோடியை சந்திக்க மறுக்கும் எடப்பாடி: ஓபிஎஸ், டிடிவி, அண்ணாமலை மட்டுமே சந்திப்பு

சென்னை: கூட்டணிக்கு சம்மதித்த பிறகும் தனக்கு எதிராக உள்ள முன்னாள் நிர்வாகிகளை தொடர்ந்து மூத்த ஒன்றிய அமைச்சர்கள் சந்தித்து பாஜ நெருக்கடி கொடுப்பதால், மதுரை வரும் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி மறுத்து விட்டார். இது அதிமுக, பாஜ வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி இலங்கையில் உள்ள அனுராதாபுரத்தில் இருந்து இன்று காலை 10.40 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்படுகிறார். ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் பகுதிக்கு 11.45 மணிக்கு வருகிறார்.

அவரை தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்கிறார். வரவேற்பு முடிந்ததும் 11.50 மணிக்கு மண்டபத்தில் இருந்து பாம்மன் செல்கிறார். அங்கு 12.25 மணிக்கு ரயில்வே பாலத்தை திறந்து வைக்கிறார். பின்னர் 12.40 மணிக்கு ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்கிறார். சிறப்பு பூஜைகளையும் செய்கிறார். அதைத் தொடர்ந்து 1.20 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்டு 1.30 மணிக்கு தமிழ்நாடு டூரிசம் மைதானத்துக்கு வருகிறார். அங்கு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பின்னர் 2.55 மணிக்கு மண்டபம் செல்கிறார். 3 மணிக்கு ஹெலிகாப்டரில் மதுரை செல்கிறார். மதுரைக்கு 3.50 மணிக்கு விமானநிலையம் வந்தடைகிறார். அங்கு முக்கிய நிர்வாகிகளை சந்திக்கிறார். அப்போது எடப்பாடி பழனிசாமியை எப்படியாவது மோடியை சந்திக்க வைக்க வேண்டும் என்று பாஜ மேலிட தலைவர்கள் தீவிரம் காட்டினர். ஆரம்பத்தில் எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால், அமித்ஷாவை சந்தித்த உடனேயே தன் கட்சியைச் சேர்ந்த செங்கோட்டையனை டெல்லிக்கு அழைத்து நிர்மலா சீதாராமன், அமித்ஷா ஆகியோர் பேசியது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து தம்பித்துரை, சி.வி.சண்முகம் ஆகியோரையும் சந்தித்துப் பேசினர். இது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டணிக்கு அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனாலும் கட்சியை உடைக்கும் பணியை பாஜ செய்தது எடப்பாடிக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. அதிமுக மூத்த தலைவர்களையும் ஒன்றிய அமைச்சர்கள் சந்தித்து வந்தனர். அதோடு, எடப்பாடி பழனிசாமியின் எதிர்ப்பாளர்களையும் அவர்கள் சந்தித்தனர்.

அதோடு ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், அண்ணாமலை ஆகியோரை சந்திக்க மோடி நேரம் ஒதுக்கியிருந்தார். இந்த தகவலும் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவந்தது. இதனால் மோடியை வரிசையில் அவர்களுடன் நின்று சந்திக்க விரும்பவில்லை. இதனால் சென்னையில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, மோடியை சந்திப்பதை தவிர்த்து விட்டார். இது பாஜ வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரத்தில் சென்னையில் நேற்று எடப்பாடி பழனிசாமியின் எதிர்பாளரான கே.சி.பழனிசாமியை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார். அப்போதும் எடப்பாடிக்கு, பழனிசாமி புகார் வாசித்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து தனது எதிர்பாளர்களை ஒன்றிய அமைச்சர்கள் தொடர்ந்து சந்தித்து வருவதால் எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால்தான் அவர் மோடியை சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது.

* கூட்டணிக்கு அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனாலும் கட்சியை உடைக்கும் பணியை பாஜ செய்தது எடப்பாடிக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.

The post அதிமுக மாஜிக்களை தொடர்ந்து சந்திப்பதால் மோடியை சந்திக்க மறுக்கும் எடப்பாடி: ஓபிஎஸ், டிடிவி, அண்ணாமலை மட்டுமே சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Modi ,AIADMK ,OPS ,TTV ,Annamalai ,Chennai ,BJP ,Edappadi Palaniswami ,Madurai ,
× RELATED நிலை நிறுத்தும் பாதையில் இருந்து...