×

கிரிமினல் குற்ற வழக்கில் ஈடுபடும் எம்பி, எம்எல்ஏக்கள் போட்டியிட நிரந்தர தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்


புதுடெல்லி: கிரிமினல் குற்ற வழக்கில் ஈடுபடும் எம்.பி, எம்.எல்.ஏக்கள் தேர்தலில் நிற்பதற்கு நிரந்தர தடை விதிக்க முடியாது என்று தெரிவித்துள்ள ஒன்றிய அரசு, இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா என்பவர் கடந்த 2017ம் ஆண்டு ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘அரசு மற்றும் நீதித்துறை பணிகளில் உள்ள ஒருவர் குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டால் வாழ்நாள் முழுவதும் அவர்கள் தொடர்ந்து பணியாற்ற அரசால் தடை விதிக்கப்படுகிறது.

ஆனால் கிரிமினல் குற்ற வழக்கில் அரசியல்வாதிகள் எம்பி, எம்.எல்.ஏக்கள் தண்டிக்கப்படுகிறபோது, தண்டனை முடிந்து 6 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டால் அவர்கள் எம்.எல்.ஏ மற்றும் அமைச்சராக கூட பதவி வகிக்க முடியும். எனவே அப்படி பட்டவர்கள் தேர்தலில் நிற்க வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து மேற்கண்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் மன்மோகன் ஆகியோர் அமர்வு, இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆகியோர் மூன்று வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று கடந்த 10ம் தேதி உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் வழக்கு தொடர்பாக ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

அதில், ‘‘குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது. அத்தகைய தகுதி நீக்கம் என்பது நாடாளுமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது ஆகும். இந்த மனு சட்டத்தை மீண்டும் எழுத அல்லது நாடாளுமன்றத்தை ஒரு குறிப்பிட்ட முறையில் சட்டம் இயற்றுமாறு வழிநடத்த முயற்சிப்பது போன்று உள்ளது. இது நீதித்துறை மறுஆய்வின் எல்லைக்கு அப்பாற்பட்டது. குறிப்பாக இந்த விவகாரத்தில் வாழ்நாள் தடை பொருத்தமானதா அல்லது இல்லையா என்பது நாடாளுமன்றத்தின் அதிகார வரம்பிற்கு மட்டுமே உட்பட்டதாகும். அதேப்போன்று தண்டனைகளின் கால அளவைக் கட்டுப்படுத்துவது அதிகப்படியான கடுமையைத் தடுக்கும் என்றாலும், அதனை ஏற்க முடியாது.

கடந்த 1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8(1)ன் படி, தகுதி நீக்கம் தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு ஆண்டுகள் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகளில், விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு ஆண்டுகள் வரை தான் நீடிக்கும். மேலும் குற்றச்சாட்டுக்குள்ளான பிரிவுகளின் கீழ் செய்யப்படும் தகுதி நீக்கங்கள் நாடாளுமன்றக் கொள்கையின் அடிப்படையில் காலத்தால் வரையறுக்கப்பட்டுள்ளன. இதில் மனுதாரர் கோரியபடி வாழ்நாள் தடையை விதிப்பது என்பது கண்டிப்பாக பொருத்தமானதாக இருக்காது. அவரது கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்கக் கூடாது. இவ்வாறு அதிக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கிரிமினல் குற்ற வழக்கில் ஈடுபடும் எம்பி, எம்எல்ஏக்கள் போட்டியிட நிரந்தர தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Union government ,Supreme Court ,New Delhi ,Dinakaran ,
× RELATED ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வை...