இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் அமைப்பு செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியிருப்பதாவது: பாஜ ஆளும் மாநிலங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு நடந்துள்ளது. உச்ச நீதிமன்றம் இவ்விவகாரம் தொடர்பாக கடுமையான கருத்துகளை தெரிவித்துள்ளது. வினாத்தாள் கசிவை தடுக்க சட்டமியற்றப்படும் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவ்விசயத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மவுனம் காக்கிறது. எனவே நாடு முழுவதும் மாநில தலைநகரங்களில் நாளை (ஜூன் 21) நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான நீதியை கேட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
இதில் அனைத்து மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள், மாநில சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள், பொதுச் செயலாளர்கள், முக்கியப் பொறுப்பாளர்கள் இதில் பங்கேற்பார்கள். ஏனெனில் ஜூன் 4ல் வெளியான நீட் தேர்வு முடிவில் சில விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் உயர்த்தப்பட்டு முறைகேடுகள் நடந்துள்ளன. மேலும் கருணை மதிப்பெண்களை வழங்குவது மேலும் சந்தேகங்களை எழுப்புகிறது. தொழில்நுட்பக் கோளாறுகள், சில தேர்வு மையங்களில் முறைகேடு, நியாயமற்ற வழிமுறைகளால் நீட் தேர்வு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பீகார், குஜராத் , அரியானாவில் நடத்தப்பட்ட நீட் முறைகேடு தொடர்பான கைது நடவடிக்கைகளில் இருந்து பார்க்கும் போது நீட் தேர்வில் நடந்த ஊழல் அப்பட்டமாக தெரிகிறது. இந்த ஊழல் பாஜ ஆளும் மாநிலங்களில் நடந்துள்ளன. இந்த குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை உச்ச நீதிமன்றமும் எடுத்துக்காட்டியது. எனவே அலட்சியத்தை பொறுத்துக் கொள்ளக் கூடாது. இதுபோன்ற முறைகேடுகள், தேர்வு முறையின் நம்பகத்தன்மையை குலைத்து, எண்ணற்ற அர்ப்பணிப்புள்ள மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறது. நீட் கேள்வித்தாள் வெளியானதற்கு எதிராக கடுமையான சட்டங்களை அமல்படுத்தி இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாப்போம் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் நாளை காங்கிரஸ் போராட்டம் appeared first on Dinakaran.