மார்த்தாண்டத்தில் திருமணம் செய்த ஒரு மாதத்தில் இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஓடிய புதுப்பெண் சென்னையில் மீட்பு: போலீஸ் தேடியதால் லாட்ஜில் தவிக்கவிட்டு மாயம்

மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் அருகே திருமணமான ஒரு மாதத்தில் கணவரை உதறிவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஓடிய புதுப்பெண், சென்னையில் மீட்கப்பட்டார். போலீஸ் தேடுவதை அறிந்த காதலன், இளம்பெண்ணை லாட்ஜில் தவிக்க விட்டு சென்றுவிட்டார். குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே மாமூட்டுவிளை பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணும் செருப்பாலூர் சாயபிலாவிளையை சேர்ந்த ஒரு வாலிபரும் காதலித்து கடந்த மே 25ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அந்த பெண் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலைபார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 3ம் தேதி இளம்பெண் வேலைக்கு செல்வதாக கணவரிடம் கூறிவிட்டு சென்றவர் திரும்பவில்லை. இதுகுறித்து புகாரின்பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிந்து தனிப்படை அமைத்து இளம்பெண்ணை தேடி வந்தனர். அவரது செல்போன் எண் சிக்னலை வைத்து விசாரித்தபோது, சென்னையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் சென்னைக்கு சென்றனர். அங்கு தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு இளம்பெண் சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்ததை கண்டுபிடித்து நேற்று முன்தினம் குமரி மாவட்டத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இளம்பெண்ணுக்கு திருமணம் ஆவதற்கு முன்பே இன்ஸ்டாகிராம் மூலம் தஞ்சாவூரை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இது திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்துள்ளது. அந்த வாலிபரின் பேச்சில் மயங்கிய இளம்பெண் தனது கணவரை உதறிவிட்டு காதலனுடன் வாழ முடிவு செய்துள்ளார். அதன்படி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்னைக்கு ஓடிவந்துவிட்டார். அவரையும் அங்கு வரச்சொல்லி பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றித்திரிந்துள்ளனர். அந்த வாலிபரையே திருமணம் செய்யவும் விரும்பியுள்ளார். ஆனால் வாலிபரோ உல்லாசமாக இருந்துவிட்டு போக திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே மார்த்தாண்டத்தில் போலீசார் தேடுவதை அறிந்ததும் அந்த வாலிபர் உஷாராகிவிட்டார்.

எங்கே நம்மை பிடித்துவிடுவார்கள் என பயந்த வாலிபர், இளம்பெண்ணை குரோம்பேட்டையில் உள்ள ஒரு லாட்ஜுக்கு அழைத்து சென்று தங்க வைத்து தப்பிச்சென்றுவிட்டார். காதலன் வராததால் ஏமாற்றமடைந்த இளம்பெண், விரக்தியில் தவித்த நிலையில்தான் போலீசார் மீட்டுள்ளனர். இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது பெற்றோருடன் செல்வதாக இளம்பெண் கூறியதை நீதிபதி அனுமதித்தார். அதன்படி போலீசாரும் அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர். காதலனை நம்பி கணவரை உதறிச் சென்ற இளம்பெண் தற்போது வாழ்க்கையை தொலைத்து நிற்கிறார்.

The post மார்த்தாண்டத்தில் திருமணம் செய்த ஒரு மாதத்தில் இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஓடிய புதுப்பெண் சென்னையில் மீட்பு: போலீஸ் தேடியதால் லாட்ஜில் தவிக்கவிட்டு மாயம் appeared first on Dinakaran.

Related Stories: