3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி உயர் நீதிமன்றம் அருகே திமுக சட்டத்துறை ஆர்ப்பாட்டம்

சென்னை: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திமுக சட்டத்துறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய மூன்று குற்றவியல் சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்த ஒன்றிய அரசை கண்டித்தும், இந்த புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் திமுக சட்டத்துறை சார்பில் இன்று உயர் நீதிமன்றம் அருகே மாபெரும் ஆர்பாட்டம் நடந்தது. இந்த ஆர்பாட்டத்திற்கு திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ, திமுக வழக்கறிஞர்கள் கே.எஸ்.ரவிச்சந்திரன், சந்துரு மாவட்ட அணியினர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு புதிய சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் என்.எஸ்.சி.போஸ் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து என்.ஆர்.இளங்கோ கூறும்போது, திமுக சட்டத்துறையும் கூட்டணி கட்சிகளின் சட்ட பிரிவு வழக்கறிஞர்களும் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறோம்.

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளை வெளியேற்றிவிட்டு எந்த விவாதமும் இல்லாமல் இந்த சட்டங்களை நிறைவேற்றியுள்ளனர். இந்த மூன்று சட்டங்கள் குறித்தும் நான், ப.சிதம்பரம் உள்ளிட்டோர் அடங்கிய நாடாளுமன்ற நிலைக்குழு எதிர்ப்பு கருத்துகளை தெரிவித்து அறிக்கை தந்தோம். அது குறித்து விவாதம்கூட நடத்தாமல் எதேச்சதிகாரமாக, தன்னிச்சையாக இந்த சட்டங்களை கொண்டுவந்துள்ளனர். குற்றவியல் நடைமுறையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் என இரு தரப்புக்குமே இந்த சட்டங்கள் பாதகமாக அமைந்துள்ளது. இந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளோம் என்றார். இதை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், அதிமுக வழக்கறிஞர்களும் 3 குற்றவியல் சட்டங்களையும் கண்டித்து உயர் நீதிமன்றம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

The post 3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி உயர் நீதிமன்றம் அருகே திமுக சட்டத்துறை ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: