வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கேரள ஆசாமி கைது

ஆலந்தூர்: வேலை தேடி சென்னைக்கு வரும் அப்பாவி பெண்களிடம், தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, அவர்களை வரவழைத்து கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஒரு கும்பல் ஈடுபடுத்தி வருவதாக சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோருக்கு புகார் வந்தது. அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் செந்தில்குமாரி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் வனிதா ஆகியோர் மேற்பார்வையில், விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமி தலைமையிலான தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதில், ஆதம்பாக்கம் பாலகிருஷ்ணன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து விபசார தடுப்பு பிரிவு போலீசார், அந்த வீட்டில் திடீர் சோதனை செய்தபோது, அங்கு, கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த சம்சுதீன் (55), பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரிந்தது. அவரை கைது செய்து, அவனிடமிருந்து 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்ணை மீட்டு, அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், வேலை தேடி வந்த பெண்ணை, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட சம்சுதீனை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கேரள ஆசாமி கைது appeared first on Dinakaran.

Related Stories: