கோபி குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது: கிராமங்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை

கோபி: கோபி அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது. கிராமங்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெள்ளஅபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே குண்டேரிப்பள்ளம் அணை அமைந்துள்ளது. இந்த அணை குன்றி மலையடிவாரத்தில் சுமார் 40 ஆண்டுக்கு முன் 42 அடி உயரத்தில் கட்டப்பட்டது. குன்றி, விளாங்கோம்பை, மல்லியதுர்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை காலங்களில் உருவாகும் 10க்கும் மேற்பட்ட காட்டாறுகள் வழியாக மழைநீர் இந்த அணையை வந்தடைகிறது. குண்டேரிப்பள்ளம் அணை மூலம் கொங்கர்பாளையம், வினோபா நகர், வாணிப்புத்தூர், குண்டேரிப்பள்ளம், மோதூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்து 500 ஏக்கர் விளைநிலங்கள் ஆண்டுதோறும் பாசன வசதி பெற்று வருகிறது.

கடந்த மாதம் அணையில் இருந்து பாசனத்திற்காக இரு வாய்க்கால்களிலும் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் சுமார் மூன்றடி உயர்ந்து 41 அடியாக இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணை நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. இதையடுத்து பொதுப்பணித்துறையினர் அணையின் நீர் வழிப்பாதையில் உள்ள கொங்கர்பாளையம், வாணிப்புத்தூர், வினோபா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அணைக்கு வரும் நீர் வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதால், அணையின் நீர்மட்டம் குறைந்து வந்த நிலையில், தற்போது பெய்த மழை காரணமாக குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பி இருப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post கோபி குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பியது: கிராமங்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: