ஜெர்மன் விமானப்படை அதிகாரிகள் ஊட்டி மலை ரயிலில் பயணம்

மேட்டுப்பாளையம்: ஜெர்மன் நாட்டு விமானப்படை அதிகாரிகள் 15 பேர் ஊட்டி மலை ரயிலில் இன்று ஆர்வத்துடன் பயணித்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் – நீலகிரி மாவட்டம் ஊட்டி இடையே நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இம்மலை ரயில் உலக பாரம்பரிய சின்னமாக யுனஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த விமானப்படை அதிகாரிகள் இன்று நீலகிரி மலை ரயிலில் ஆர்வமுடன் பயணித்து மகிழ்ந்தனர்.

முன்னதாக கோவையில் நடைபெறும் சர்வதேச ராணுவ கருத்தரங்கு மற்றும் பயிற்சி முகாமில் பங்கேற்க வந்திருந்த ஜெர்மன் நாட்டு விமானப்படை தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இங்கோ ஜெர்ஹர்டஸ் தலைமையிலான 15 பேர் கொண்ட ராணுவ உயரதிகாரிகள் கொண்ட குழுவினர் இன்று காலை 6 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் வந்னர். இங்கு அமைக்கப்பட்டிருந்த மலை ரயில் தொடர்பான கண்காட்சியை கண்டு ரசித்தனர். பின்னர், ரயில்வே துறையால் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பெட்டியில் அமர்ந்து பிற சுற்றுலா பயணிகளோடு மலை ரயிலில் பயணம் மேற்கொண்டனர்.

குன்னூர் ரயில் நிலையம் வரை உள்ள இயற்கை எழில் மிகுந்த செங்குத்தான மலைப்பாதையில் ரயிலில் பயணித்தனர். பின்னர் குன்னூர் ரயில் நிலையத்தில் இறங்கிய அதிகாரிகள் குழுவினர் குன்னூர் வெல்லிங்டனில் உள்ள இந்திய ராணுவ முகாமிற்கு சென்றனர்.

The post ஜெர்மன் விமானப்படை அதிகாரிகள் ஊட்டி மலை ரயிலில் பயணம் appeared first on Dinakaran.

Related Stories: