தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் தூய்மையை நோக்கி மேலும் ஒரு படி பேரணி

*மேயர், ஆணையர் ஆகியோர் தொடங்கி வைப்பு

தஞ்சாவூர் : தஞ்சாவூரில் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் ‘தூய்மையே சேவை- 2024’ என்ற தலைப்பில் நேற்று முதல் 2 அக்டோபர் 2024 வரை பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற உள்ளன.தஞ்சாவூர் மாநகராட்சியில் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் ‘தூய்மையே சேவை- 2024’ என்ற தலைப்பில் நேற்று முதல் 2 அக்டோபர் 2024 வரை பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

முதல் நிகழ்வாக நேற்று தஞ்சாவூர் ரயிலடியில் மாநகராட்சி சார்பில் ”தூய்மையை நோக்கி மேலும் ஒரு படி” என்ற தலைப்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மேயர்.சண்.இராமநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், துணை மேயர் டாக்டர்.அஞ்சுகம் பூபதி, மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். பேரணி, தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு அண்ணா நூற்றாண்டு அரங்கம் வரை நடைபெற்றது.

தூய்மையே சேவை முகாமில் செப்டம்பர் 19ம் தேதி பெரிய கோயில், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மாபெரும் கூட்டுத் தூய்மை பணி நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 20, 21 மற்றும் 22 ஆகிய மூன்று நாட்களும் தஞ்சாவூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்காக மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. செப்டம்பர் 23ம் தேதி குந்தவை நாச்சியார் மகளிர் கலைக் கல்லூரியில் ”தூய்மையை நோக்கி மேலும் ஒரு படி” என்ற தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன. செப்டம்பர் 24ம் தேதி தஞ்சாவூரில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் ”தூய்மையே சேவை” என்ற தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன.

மேலும் செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பொது இடங்களில் 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. செப்டம்பர் 28, 29 மற்றும் 30 தேதிகளில் தஞ்சாவூரில் உள்ள பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் கூட்டுத் தூய்மை பணி நடைபெற உள்ளது.

அக்டோபர் 1 அன்று சிறப்பாக வீட்டுத் தோட்டம் அமைத்தவர்கள் மற்றும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று அன்றாடம் தூய்மை பணியாளர்களிடம் தரம் பிரித்து தருபவர்கள் என 150க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. நேற்று நடைபெற்ற பேரணிக்கான ஏற்பாடுகளை சுகாதார அலுவலர் சீனிவாசன் தலைமையில் தூய்மை பாரத இயக்கத்தினர் செய்திருந்தனர்.

The post தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் தூய்மையை நோக்கி மேலும் ஒரு படி பேரணி appeared first on Dinakaran.

Related Stories: