சுழற்பந்து வீச்சாளர் இடத்தில் ஜடேஜா ஆடுகிறார். பாஸ்ட் பவுலிங்கில் பும்ரா, சிராஜ், ஷர்துல் தாகூர், அர்ஷ்தீப் சிங் அல்லது பிரசித் கிருஷ்ணா இடம்பெறுவர். அனுபவ வீரர்கள் இல்லாத நிலையில் கில் தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. புதிய கேப்டன் கில்லுக்கு முதல் டெஸ்ட் தொடரே பெரும் சவாலாக அமைந்துள்ளது. பேட்டிங்கில் ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், ஆகியோருடன் புதுமுக வீரர் சாய்சுதர்சன், 7 ஆண்டுக்கு பின் களம் இறங்கும் கருண் நாயர் ஆகியோர் மீது எதிர்பார்ப்பு உள்ளது. பவுலிங்கில் நம்பர் 1 வீரராக உள்ள பும்ரா, இங்கிலாந்து வீரர்களின் தூக்கத்தை கெடுப்பார்.
மறுபுறம் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். முதல் டெஸ்டிற்கான பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பேட்டிங்கில் பென் டக்கெட், சாக் கிராலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித் என வலுவான வரிசை இருக்கிறது. பவுலிங்கில் ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டோங் ஆகியோர் வேகத்தில் இந்தியாவுக்கு நெருக்கடி அளிப்பர். சுழலில் சோயிப் பஷீர் இடம் பெற்றுள்ளார். பேட்டிங்கில் ஜோ ரூட் இந்தியாவுக்கு எதிராக மட்டும் 10 சதம் அடித்துள்ளார். அவரை கட்டுப்படுத்துவதுதான், இந்திய பவுலர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும். இரு அணிகளும் வெற்றியுடன் தொடரை தொடங்கும் முனைப்பில் உள்ளன. கடந்த முறை இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் டிரா (2-2) ஆன நிலையில், இந்த முறை தொடரை வெல்ல இங்கிலாந்து போராடும். இந்திய நேரப்படி தினமும் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியை சோனி டென் சேனல் மற்றும் ஜியோ ஸ்டார் ஓடிடி நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
The post லீட்ஸ் மைதானத்தில் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்; இங்கிலாந்து மண்ணில் சாதிக்குமா இந்தியா? appeared first on Dinakaran.
