“டெல்லி சலோ” பேரணி.. விவசாயிகள் மீது மீண்டும் சரமாரி கண்ணீர் புகைக்குண்டு வீசியதால் டெல்லி சம்பு எல்லையில் பதற்றம்..!!

டெல்லி: விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படாததால் மீண்டும் போராட்டம் தொடர்ந்த நிலையில் டெல்லி சம்பு எல்லையில் விவசாயிகள் மீது மீண்டும் கண்ணீர் புகைக்குண்டு வீசியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது, பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை ஒன்றிய அரசு தந்தது.

அதன்பேரில் போராட்டத்தை விவசாயிகள் வாபஸ் பெற்றனர். ஆனால், சுமார் 4 ஆண்டாகியும் எந்த வாக்குறுதியையும் ஒன்றிய அரசு நிறைவேற்றாத நிலையில், 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் டெல்லியில் போராட்டம் நடத்த ‘டெல்லி சலோ’ பேரணிக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய சங்கங்கள் தலைநகர் டெல்லியை நோக்கி விவசாயிகள் போராட்டத்தை கடந்த வாரம் விவசாயிகள் தொடங்கினர்.

இதில் பங்கேற்பதற்காக கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி நோக்கி புறப்பட்டனர். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விவசாயிகள் நடத்தும் இந்த போராட்டம் ஆளும் பாஜக அரசுக்கு பெரும் சிக்கலாக மாறி இருக்கிறது. எனவே இதனை தடுக்க பல்வேறு முயற்சிகளில் ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. டிராக்டர்களில் டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகளை தடுப்பதற்காக, சாலைகளில் ஆணிகள், முள் வேலி தடுப்பு, கான்கிரீட் தடுப்புகள் அமைத்து தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால், அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் காவல்துறை கலைக்க முயற்சித்தது. ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாத விவசாயிகள் இன்றும் புல்டோசர்களுடன் டெல்லி நோக்கி வந்த விவசாயிகளை தடுப்புகளை தகர்த்து எரிந்துவிட்டு செல்ல முயற்பட்டனர். அப்போது மீண்டும் அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு தாக்கல் நடத்தப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

The post “டெல்லி சலோ” பேரணி.. விவசாயிகள் மீது மீண்டும் சரமாரி கண்ணீர் புகைக்குண்டு வீசியதால் டெல்லி சம்பு எல்லையில் பதற்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: