செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மருந்து கழிவுகளால் துர்நாற்றம்: நோய் பாதிக்கும் அபாயம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கியுள்ள மருந்து மற்றும் பல்வேறு குப்பைக் கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு பல்வேறு நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை நீடித்து வருகிறது. இக்குப்பைகளை உடனுக்குடன் அகற்றி தூய்மை பணிகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் சுற்றுவட்டாரப் பகுதிகளான உத்திரமேரூர், வாலாஜாபாத், வந்தவாசி, காஞ்சிபுரம், பெருமந்தூர், ஒரகடம், கல்பாக்கம், கூவத்தூர், மாமல்லபுரம், கேளம்பாக்கம், கோவளம், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்தூர், மறைமலைநகர், சிங்கபெருமாள்கோவில், மகேந்திரா சிட்டி, மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து மகப்பேறு உள்பட பல்வேறு நோய்கள் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு நோய்களுக்காக உள்நோயாளியாக தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தேங்கியுள்ள மருந்து மற்றும் பல்வேறு குப்பைக் கழிவுகளை நகராட்சி நிர்வாகம் அகற்றும் பணிகளில் அலட்சியம் காட்டி வருகிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருவதால், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்தொற்று பாதிப்புகள் அதிகரிக்கும் அபாயநிலை நீடித்து வருகிறது. மருத்துவமனை வளாகத்தில் தேங்கியுள்ளவற்றை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து கொடுத்தால் மட்டுமே எடுத்து செல்ல முடியும் என கடந்த ஒரு மாதமாக நகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்ற வருவதில்லை எனக் கூறப்படுகிறது.

எனவே, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தேங்கியுள்ள மருந்து மற்றும் பல்வேறு குப்பைக் கழிவுகளை முறையாக அகற்றுவதற்கு மாவட்ட கலெக்டர், மருத்துவமனை முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மருந்து கழிவுகளால் துர்நாற்றம்: நோய் பாதிக்கும் அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: