பள்ளிப்பட்டு பகுதியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள்: எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு பகுதியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகளை எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ தொடங்கிவைத்தார். பள்ளிப்பட்டு அருகே, நெடுங்கல் பகுதியில் திருத்தணி-பொதட்டூர்பேட்டை மாநில நெடுஞ்சாலை சந்திப்பு சாலையிலிருந்து ஈதலகுப்பம், சந்திராப்பள்ளி உட்பட்ட 5 கிராம மக்கள் பயன்பெறும் வகையில், ஒன்றிய சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக பிரதம மந்திரியின் கிராம சதஜ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1.64 கோடி மதிப்பீட்டில் 3 கி.மீ தூரத்திற்கு தார் சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

இதில், திருத்தணி எம்.எல்.ஏ. எஸ்.சந்திரன் பங்கேற்று தார் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கிவைத்தார். இதனையடுத்து, ராமசமுத்திரம் ஊராட்சியில் ஜி.பி.ஆர்.கண்டிகை கிராம சாலையை முதலமைச்சர் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.52.96 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. மேளப்பூடி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டிடம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.30.10 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணிகளையும் தொடங்கிவைத்தார்.

மேலும் கோணசமுத்திரம் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.16.55 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சிகளில் பள்ளிப்பட்டு தெற்கு ஒன்றியச் செயலாளர் ஜி.ரவீந்திரா, மத்திய ஒன்றிய பொறுப்பாளர் சந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் காயத்ரி கோவிந்தசாமி, தாயார் கோவிந்தசாமி, வடக்கமலையான்,

குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சோமசேகர், ஒன்றிய பொறியாளர் சாவித்திரி, பணி மேற்பார்வையாளர் முகமது யாசின், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்து, அற்புதராஜ், திமுக தலைமை கழக பேச்சாளர் முரசொலி மூர்த்தி, திமுக நிர்வாகிகள் கோபி, நெடுங்கல் சிவானந்தம், இறைதூதர் எத்திராஜ், மீசை வெங்கடேசன், மணி, கோவர்தன் நாயுடு, அம்பேத்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post பள்ளிப்பட்டு பகுதியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள்: எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: