பஸ்-ஆட்டோ நேருக்கு நேர் மோதி தீ விபத்து; தீயில் கருகி டிரைவர் உள்பட 2 பேர் பரிதாப பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் தனியார் பஸ் ஆட்டோ மீது மோதிய விபத்தில் ஆட்டோ தீப்பிடித்ததால் அதில் இருந்த டிரைவர் உள்பட 2 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள பானூர் பகுதியைச் சேர்ந்தவர் அபிலாஷ் (36). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளார். நேற்று இரவு 9 மணியளவில் இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஷஜீஷ் என்பவருடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். தலச்சேரி-கதிரூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த ஒரு தனியார் பஸ், ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது.

மோதிய வேகத்தில் ஆட்டோ சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. அந்த ஆட்டோ எரிவாயுவில் (சிஎன்ஜி) இயங்குவதால் ஆட்டோவில் திடீரென தீப்பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டோ முழுவதும் தீ வேகமாக பரவியது. விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆட்டோவில் இருந்து அபிலாஷ் மற்றும் ஷஜீஷ் ஆகியோரால் வெளியே வரமுடியவில்லை. மேலும் இருவர் மீதும் தீப்பிடித்தது. தீயில் கருகிய இருவரும் தங்களை காப்பாற்றுமாறு கத்தி கதறி கூச்சலிட்டனர்.

இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் ஆட்டோ அருகே சென்று அபிலாஷ் மற்றும் ஷஜீஷை மீட்க முயன்றனர். ஆனால் தீ கொழுந்து விட்டு எரிந்ததால், யாராலும் ஆட்டோ அருகே செல்ல முடியவில்லை. இது குறித்து தலச்சேரி தீயணைப்புப்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் அபிலாஷும், ஷஜீஷும் சம்பவ இடத்திலேயே அனைவரது கண் முன்னே தீயில் கருகி உயிரிழந்தனர். இது குறித்து அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தலைச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆட்டோ தீப்பிடித்து 2 பேர் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

The post பஸ்-ஆட்டோ நேருக்கு நேர் மோதி தீ விபத்து; தீயில் கருகி டிரைவர் உள்பட 2 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: