ரூ.20 ஆயிரம் லஞ்சம்; தாசில்தார் கைது

கூடலூர்: நில எல்லை வரையறை செய்து வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட தோட்ட மூலா பகுதியில் வசிக்கும் உம்மு சல்மா என்பவரின் தாய் இறந்துவிட்டார். கடந்த ஆண்டில் அவரது தந்தை மற்றும் சகோதரரும் இறந்தனர்.

இந்நிலையில் உம்மு சல்மா தோட்ட மூலாவில் உள்ள குடும்பச்சொத்தில் தனது பாகம் 36 சென்ட் மற்றும் அவரது பெரியப்பா வழங்கிய 6 சென்ட் உள்ளிட்ட 42 சென்ட் நிலத்தை தனது பெயருக்கு மாற்றம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டார். இதுதொடர்பாக உம்மு சல்மா கூடலூர் தாசில்தார் ராஜேஸ்வரியிடம் சொத்தை மறுவரையறை செய்து வழங்க கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 17ம் தேதி விண்ணப்பம் அளித்துள்ளார்.

அப்போது அவரிடம் தாசில்தார் ராஜேஸ்வரி 2 லட்சம் ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டுள்ளார். இதுகுறித்து உம்மு சல்மா ஊட்டியில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்கள் அறிவுறுத்தலின்பேரில் ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரம் நோட்டுகளை நேற்று இரவு தாசில்தார் அலுவலகத்தில் ராஜேஸ்வரியிடம் உம்மு சல்மா கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக லஞ்ச பணத்துடன் தாசில்தார் ராஜேஸ்வரியை கைது செய்தனர்.

The post ரூ.20 ஆயிரம் லஞ்சம்; தாசில்தார் கைது appeared first on Dinakaran.

Related Stories: