சாதனைகளை முறியடித்து கனவுகளை செதுக்குகிறார் சென்னையின் சொந்தப் பையன் அஷ்வின் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

ராஜ்கோட் : டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த இந்திய வீரர் அஷ்வினுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் ராஜ்கோட்டில் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதையடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது.

அப்போது அஸ்வின் தான் வீசிய 2வது ஓவரின் முதல் பந்திலேயே கிராலியை 15 ரன்களில் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 500வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். அனில் கும்ப்ளேவிற்கு அடுத்தபடியாக இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்திய ஜாம்பவான் அனில் கும்ப்ளே 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி படைத்த சாதனையை, அஸ்வின் 98 போட்டிகளில் விளையாடி படைத்துள்ளார். இந்த பட்டியலில் முதலிடத்தில் 87 போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்டுகள் வீழ்த்திய இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். இந்த நிலையில், இந்திய வீரர் அஷ்வினுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சாதனைகளை முறியடித்து கனவுகளை செதுக்குகிறார் சென்னையின் சொந்தப் பையன் அஷ்வின். மாயாஜால சுழற்பந்து வீச்சில் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியதற்கு வாழ்த்துகள். அஸ்வினின் பந்துவீச்சில் திறமை, தீர்க்கமான இலக்கு
வெளிப்படுகிறது.அஸ்வின் மேலும் ஏராளமான விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளை குவிக்க வாழ்த்துகள்.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post சாதனைகளை முறியடித்து கனவுகளை செதுக்குகிறார் சென்னையின் சொந்தப் பையன் அஷ்வின் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!! appeared first on Dinakaran.

Related Stories: