தியாகிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.11,500 ஆக உயர்வு; அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: விடுதலைப் போராட்ட வீரர்கள், விடுதலைப் போராட்டத் தியாகிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சுதந்திர தின உரையில், தியாகிகள் குடும்பங்களுக்குப் பயனளிக்கும் வகையில் சில அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கிவரும் மாதாந்திர ஓய்வூதியத்தை 20 ஆயிரத்திலிருந்து 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கவும் உத்தரவிட்டார்.

விடுதலைப் போராட்டத் தியாகிகளின் குடும்பங்களுக்கு தற்போது வழங்கிவரும் மாதாந்திரக் குடும்ப ஓய்வூதியத்தை 11 ஆயிரம் ரூபாயிலிருந்து 11 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக, கூடுதல் செலவீனமாக 29.55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று, வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகங்கை மருது சகோதரர்கள், இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, வ.உ. சிதம்பரனார் ஆகியோரின் வழித்தோன்றல்கள் பெற்றுவரும் மாதாந்திரச் சிறப்பு ஓய்வூதியத்தை 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக, கூடுதல் செலவீனமாக 5.55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

The post தியாகிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.11,500 ஆக உயர்வு; அரசாணை வெளியிட்டது தமிழக அரசு appeared first on Dinakaran.

Related Stories: