தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர் இம்ரான் கட்சியை தடை செய்ய முடிவு: பாக். அரசு அதிரடி அறிவிப்பு

இஸ்லாமாபாத்: தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கட்சிக்கு பாகிஸ்தான் அரசு தடை செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கான் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் (பிடிஐ) கட்சியை கடந்த 1996ம் ஆண்டு தொடங்கினார். 2018ம் ஆண்டு முதல் முறையாக ஆட்சியை பிடித்து பிரதமரானார். தற்போது அவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்த தேர்தலில் இம்ரான் கட்சியினர் பலர் வெற்றி பெற்றாலும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி கூட்டணி ஆட்சி அமைத்தது. இந்நிலையில், இம்ரான் கானின் பிடிஐ கட்சி பல்வேறு தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியிருக்கும் பாகிஸ்தான் அரசு அக்கட்சிக்கு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தித் துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் நேற்று அளித்த பேட்டியில், ‘‘வெளிநாட்டு நிதி பெற்றது, மே 9 கலவரம், பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், சர்வதேச நிதியத்தில் பாகிஸ்தானுக்கு கடன் வழங்கப்படுவதை தடுக்க நாட்டிற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டது என பிடிஐ கட்சிக்கு எதிரான வலுவான மிகவும் நம்பகமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில் அக்கட்சிக்கு அரசு தடை விதிக்க உள்ளது ’’ என்றார்.

The post தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக முன்னாள் பிரதமர் இம்ரான் கட்சியை தடை செய்ய முடிவு: பாக். அரசு அதிரடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: