ஈரானில் பரபரப்பு அமைதிக்கான நோபல் பரிசு வென்ற சமூக சேவகி கைது: சர்வதேச அமைப்புகள் கண்டனம்

துபாய்: ஈரானில் மனித உரிமைகள் வழக்கறிஞர் கோஸ்ரோ அலிகோர்டி கடந்த 5ம் தேதி அவரது அலுவலகத்தில் சடலமாக கிடந்தார். மாரடைப்பால் அவர் இறந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டாலும், அலிகோர்டி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில், அலிகோர்டியின் நினைவேந்தல் நிகழ்ச்சி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து 680 கிமீ தொலைவில் உள்ள மஸ்ஸத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

அதில், பிரபல மனித உரிமை ஆர்வலரும் 2023ல் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான நர்கிஸ் முகம்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பாதுகாப்பு படை மற்றும் போலீசார் நர்கிஸ் உள்ளிட்டோரை கைது செய்துள்ளனர். நர்கிஸ் அடித்து இழுத்து செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவர் எங்கு சிறை வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலையும் ஈரான் அரசு உறுதிபடுத்தவில்லை.

இதற்கு உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. நர்கிஸ் இருக்கும் இடத்தை ஈரான் அரசு உடனடியாக வெளியிட வேண்டும், எந்த நிபந்தனையும் இன்றி அவரை விடுவிக்க வேண்டுமென நார்வே நோபல் பரிசு கமிட்டி வலியுறுத்தி உள்ளது. சுமார் 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட நர்கிஸ் கடந்த 2024 டிசம்பரில் மருத்துவ காரணங்களுக்காக தற்காலிகமாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: