அதானி மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அமெரிக்க நீதித்துறை குற்ற வழக்கு தொடுத்துள்ள நிலையில், அமெரிக்க பங்கு பரிவர்த்தனை பாதுகாப்பு ஆணையம் தரப்பில் இரண்டு சிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்கண்ட மூன்று வழக்குகளும் அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், இவை அனைத்தையும் ஒரே நீதிபதி அமர்வுக்கு மாற்றி நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து வழக்குகளையும் மாவட்ட நீதிபதி நிக்கோலஸ் ஜி கராஃபிஸ் விசாரிப்பார் என்றும் அனைத்து வழக்குகளும் தனித்தனியே விசாரிக்கப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தொழிலதிபர் கெளதம் அதானி மற்றும் அவரின் உறவினா் சாகா் அதானி உள்ளிட்டோர் மீதான ஊழல் புகார் தொடர்பான விசாரணைக்கு இந்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் உதவியை கோரியுள்ளதாக நேற்று நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் அமெரிக்க பங்கு பரிவா்த்தனை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் கௌதம் அதானி, உறவினர் சாகர் அதானி மீதான விசாரணையை தொடர தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக ஆணையம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதானி கிரீன் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றமும், அமெரிக்க பங்கு பரிவர்த்தனை பாதுகாப்பு ஆணையமும் பதிவு செய்திருக்கும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என மறுத்துள்ளது அதானி குழுமம், சாத்தியமான அனைத்து சட்டப்பூர்வ உதவிகளையும் நாடுவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
The post அதானி மீதான ஊழல் புகார் விவகாரம்: இந்தியாவின் உதவியை கோருகிறது அமெரிக்கா!! appeared first on Dinakaran.
