பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை ஒன்றியம் கோபாலபுரம் ஊராட்சி செயலராக செல்வி என்ற பெண் பணியாற்றி வருகிறார். அவரை பணியிட மாற்றம் செய்யக்கோரி ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஊராட்சி மன்ற தலைவர் பலராமன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலினிடம் தீர்மான நகல் வழங்கியுள்ளார். இந்நிலையில், ஊரா ட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்தும், தீர்மானம் திரும்ப பெற வலியுறுத்தியும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு வழங்கி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும் அலுவலகத்தில் இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பேச்சு வார்த்தை நடத்த முன்வரவில்லை. இதனால், நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் மாலை ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.