திருச்சி, டிச.2: திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மற்றும் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட திமுக வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு தலைமை வகித்து பேசியதாவது: வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அதில் எந்த வகையிலும் முறைகேடு செய்து விடாதப்படி திமுக வழக்கறிஞர்கள் கவனமாக கண்காணிக்க வேண்டும். கடந்த தேர்தலில் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்குமிடையே 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் இருந்தது. எனவே பதிவான வாக்குகள் குறித்து கவனமாக குறித்துக்கொள்ள வேண்டும். தேர்தலின்போது வாக்கு பதிவு இயந்திரங்கள் பழுதானால் மாற்று இயந்திரங்கள் கொண்டு வரப்படும்.