மூன்றடைப்பு அருகே மாமனாரை தாக்கிய மருமகன் உள்பட 6 பேர் மீது வழக்கு

நாங்குநேரி, டிச.1:  மூன்றடைப்பு அருகே மாமனாரை தாக்கிய மருமகன் உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  மூன்றடைப்பு அருகே உள்ள பூலம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் கந்தவேல் (57) விவசாயி. இவரது மகள் மாலதிக்கும் கோபாலசமுத்திரம் அருகிலுள்ள பிராஞ்சேரியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முத்துகிருஷ்ணன் (35) என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாலதி கணவரை பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.  இந்நிலையில் மனைவியை அழைத்து செல்வதற்காக முத்துகிருஷ்ணன், மாமனார் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது சேர்ந்து வாழ வருமாறு முத்துகிருஷ்ணன் அழைக்கும் போது மாலதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து கந்தவேல், முத்துகிருஷ்ணனை கண்டித்துள்ளார். அதில் மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் முத்துகிருஷ்ணன் மற்றும் அவருடன் வந்த அவரது தம்பி சுபாஷ், உறவினர்கள் பிராஞ்சேரியைச் சேர்ந்த பசுபதி, சுமன், முகேஷ் மனோ ஆகியோர் சேர்ந்து இரும்பு கம்பியால் கந்தவேலை தாக்கியுள்ளனர். தடுக்க வந்த கந்தவேல் மகன் கார்த்திக் மற்றும் உறவினர் சுகுமார் ஆகியோர் காயமடைந்ததால் மூவரும் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் மூன்றடைப்பு சப்-இன்ஸ்பெக்டர் சோபியா விசாரணை நடத்தி தாக்குதலில் ஈடுபட்ட முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்தார்.

Related Stories: