புதுச்சேரி, டிச.1: புதுச்சேரி முத்தியால்பேட்டையில் ஏலச்சீட்டு பணமோசடியை கண்டித்து அடகுகடையை பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி, குமரகுருபள்ளத்தை சேர்ந்தவர் சஞ்சய்குமார்(56). இவர் முத்தியால்பேட்டை மற்றும் புஸ்சிவீதி மணிக்கூண்டு அருகே சிட்பண்ட்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவிக்கவே, புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அரசு ஊழியர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் அவரிடம் மாதாந்திர ஏலச்சீட்டு மட்டுமின்றி குலுக்கல் பரிசு சீட்டும் கட்டியதாக கூறப்படுகிறது.புதுச்சேரியை தலைமையிடமாக கொண்டு கடலூர், திண்டிவனத்திலும் தனது கிளைகளை சஞ்சய்குமார் விரிவாக்கம் செய்ததால் ஏராளமான வாடிக்கையாளர் இதில் சேர்ந்து பணம் கட்டினர். இதனிடையே கொரோனா ஊரடங்கு காரணமாக இந்நிறுவனம் சில மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு சஞ்சய்குமார் திடீரென மாயமானார்.இதையடுத்து வாடிக்கையாளர்கள் அவரது வீட்டிற்கு சென்றபோது, வீட்டை காலி செய்து தலைமறைவாகிவிட்டது தெரியவரவே அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ஒதியஞ்சாலை காவல் நிலையம் சென்று மோசடி தொடர்பாக முறையிட்டனர். இருப்பினும் அவர் மீது நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த வாடிக்கையாளர்கள் ேநற்று மதியம் முத்தியால்பேட்டை, மார்க்கெட் எதிரே சஞ்சய்குமாரின் நெருங்கிய உறவினர்கள் வைத்திருக்கும் நகை அடகு கடையை திடீரென முற்றுகையிட்டனர்.