திருவண்ணாமலை, நவ.25: வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகளை தெரிவிக்க வசதியாக, கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள நிவர் புயல் இன்று மாமல்லபுரம், காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதையொட்டி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிதீவிர மழைக்கான வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளது. மேலும், மணிக்கு 120 கிமீ வேகத்தில் காற்று வீசும் என தெரிவித்துள்ளது. அதையொட்டி, அனைத்துத்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு நடத்தினார். பேரிடர் மீட்பு நிவாரண உதவிகளுக்காக 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தொடர்பு கொள்ள வசதியாக, கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் பேரிடர் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.