திருச்சி, நவ. 22: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (38). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவர் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஸ்டாலின் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து கான்ட்ராக்ட் மூலம் டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் லங்காரா பகுதியை சேர்ந்தவர் பாய்ராம் (28). இவரது மனைவி நிர்மா. இவர்களுக்கு ஒண்ணேகால் வயதில் குழந்தை உள்ளது. வடமாநிலத்தவர்களான இருவரும் கடந்த 20 நாட்களுக்கு முன் நண்பர் மூலம் பழகியதில், ஹரிகிருஷ்ணனிடம் வேலைக்கு சேர்ந்தார். ஒரே மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் பாய்ராமை வீட்டிற்கு வந்து செல்ல ஹரிகிருஷ்ணன் அனுமதித்தார்.
இதற்கிடையில் ஹரிகிருஷ்ணன் மகளின் திருமணத்திற்காக சிறுகசிறுக நகைகள் மற்றும் பணம் சேர்த்து கொண்டிருந்தார். அதன்படி 10 பவுன் நகை மற்றும் ரூ.5 ரொக்கம் சேர்த்து வைத்திருந்ததை பீரோவில் வைத்திருந்தார். இதனை அறிந்து கொண்ட பாய்ராம், கடந்த 16ம்தேதி பீரோவில் இருந்த நகை, பணத்தை எடுத்து கொண்டு மனைவி மற்றும் குழந்தையுடன் மாயமானார். இதுகுறித்து ஹரிகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் எ.புதூர் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் பாய்ராம் மற்றும் அவரது மனைவியை அம்மாநில போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து திருச்சி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து போலீசார் அங்கு சென்று அவர்களை கைது செய்து அழைத்து வரவுள்ளனர்.