திருத்தணி: திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். இதன்பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது; தமிழகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறை, பேரிடர் கால துறைகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறது. 4 ஆயிரத்து 333 இடங்களை கண்காணித்து அதற்கு உண்டான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையின்போது எந்தவித சேதாரங்களும் இல்லாமல் இருக்க முதல்வர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூரில் இருந்து தூத்துக்குடி வரை உள்ள மீனவ மக்களுக்கு உரியமுறையில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.