திருக்கனூர் அருகே பட்டப்பகலில் துணிகரம் இளம்பெண்ணிடம் செயின் பறிப்பு பைக்கில் தப்பிய வாலிபருக்கு வலை

திருக்கனூர், நவ. 13: திருக்கனூர் அருகே பட்டப்பகலில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்து பைக்கில் தப்பிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி திருக்கனூர் அடுத்த கூனிச்சம்பட்டு மெயின் ரோட்டை சேர்ந்த பாலு மகள் சுகந்தி (20). இவர் திருக்கனூர் மெயின் ரோடு சித்தலம்பட்டில் உள்ள ஒரு ரத்தப்பரிசோதனை நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை இவர், வேலைக்கு செல்வதற்காக திருக்கனூர் பிள்ளையார் கோயில் தெரு வழியாக நடந்து சென்றார். அப்போது எதிரே ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த வாலிபர், திடீரென சுகந்தி கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை பறித்தார்.

இதில் சுகந்திக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதனை கண்டு திடுக்கிட்ட சுகந்தி அலறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வரவே, செயினை அறுத்து கொண்டு, அந்த வாலிபர் பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டார். இதுகுறித்து திருக்கனூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிந்து செயின் பறிப்பு ஆசாமியை தேடி வருகிறார். பட்டப்பகலில் நடந்த இந்த செயின் பறிப்பு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: