கோவில்பட்டி, நவ. 11: கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேலு (65). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது மனைவி அய்யம்மாள். தம்பதிக்கு பாண்டிதுரை (30) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். திருமணமான மகள் வெளியூரில் வசித்து வருகிறார். இவரது இரு பெண் குழந்தைகள் தற்போது தாத்தா வேலு வீட்டில் அவரது பராமரிப்பில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வேலு தனது மனைவி, மகன் மற்றும் பேத்திகளுடன் வீட்டின் முன்அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் இவரது வீட்டின் காம்பவுன்ட் சுவர் ஏறிக்குதித்த மர்மநபர்கள், மாடிப்படி வழியாக வீட்டிற்குள் புகுந்தனர். பின்னர் அங்குள்ள ஒரு அறையில் இருந்த பீரோவை திறந்து அதிலிருந்த நெக்லஸ், வளையல், செயின், மோதிரம், கம்மல் உள்ளிட்ட 40 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.