மன்னார்குடி, நவ. 11: விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்து மன்னார்குடி, திருத்துறைப்பூண்டியில் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகை வரும் 14ம்தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் போது விபத்தில்லா தீபாவளி என்ற தலைப்பில் தீயணைப்பு துறை பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அதன்படி மாவட்ட தீயணைப்பு அலுவலர் அனுசுயா அறிவுறுத்தலின் பேரில் மன்னார்குடியில் நேற்று தீயணைப்புத்துறை சார்பில் நிலைய அலுவலர்கள் பாலசுப்ரமணியன், மானெக்சா (போக்குவரத்து) ஆகியோர் தலைமையில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. பிரச்சாரத்தின் போது விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்தும், பாதுகாப்பாக வெடிகளை வெடிப்பது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.