கரூர், நவ. 1: பொதுமக்களிடையே கொரோனா பீதி தற்போது குறைந்து வருவதும், முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரிவதும் சகஜமாக நடைபெற்று வருவதால் திரும்பவும் கரூர் மாவட்டத்தில் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் இதுநாள் வரை கொரோனாவால் 4132 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3810 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 44 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். தற்போதைய நிலையில் 278 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைவான அளவில் இருந்த நிலையில் நேற்று 24 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மக்களிடையே போதிய விழிப்புணர்வும், பயமும் இல்லை என்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. தற்போது, வழக்கம் போல அனைத்து பகுதிகளும் செயல்பட்டு வருகின்றன. ஜவுளி கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையம் போன்ற பகுதிகளுக்கு வரும் பொதுமக்களில் பலர் முகக்கவசம் அணியாமல் பீதியின்றி உலா வருகின்றனர்.