சின்னாளபட்டி, அக். 28: பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்து திமுக, திக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் பங்காருபுரம் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு நேற்று முன்தினம் இரவு சிலர் காவி சாயம் பூசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து, நேற்று மாலை 5 மணியளவில் ரெட்டியார்சத்திரம் பேருந்துநிலையம் அருகே ஒன்றிய திமுக மற்றம் திராவிடர் கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ரெட்டியார்சத்திர ஒன்றிய பெருந்தலைவர் சிவகுருசாமி தலைமை வகித்தார். திக மண்டல தலைவர் நாகராஜன், மாவட்ட தலைவர் வீரபாண்டி, மாவட்ட துணைத்தலைவர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது, பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசும் சர்ச்சையை உருவாக்க நினைப்பவர்களை கைது செய்யா விட்டால் மாபெரும் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.