சேர்வலாறுக்கு அரசு பஸ் இயக்க கோரி பாபநாசம் பணிமனை முற்றுகை

வி.கே.புரம், அக். 28: சேர்வலாறுக்கு பேருந்து விடக்கோரி பாபநாசம் அரசு போக்குவரத்துக் கழகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாபநாசம் அரசு போக்குவரத்து கழகத்திலிருந்து நாள்தோறும் சேர்வலாறுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆனால் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் தளர்வுகளின் அடிப்படையில் போக்குவரத்து தொடங்கின. பாபநாசம் மலைப்பகுதியிலுள்ள சேர்வலாறுக்கும் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக சேர்வலாறுக்கு சென்று கொண்டிருந்த பேருந்து சேவை திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு வசிக்கும் காணியின மக்களும், மின்வாரிய மக்களும் பெரிதும் பாதிக்கப் பட்டனர். சேர்வலாறுக்கு மீண்டும் பேருந்து விடக்கோரி நேற்று பாபநாசம் அரசு  போக்குவரத்து கழகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம் போக்குவரத்துகழக மேலாளர் சண்முகம் மற்றும் வி.கே.புரம் எஸ்ஐ மணிகண்டன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக பேருந்து விடுவதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.  இதில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் ரவீந்திரன், சுரேஷ்பாபு, சேர்வலாறு சாவித்திரி மற்றும் காணியினத்தவர்கள், மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: