ஆத்தூர, அக்.23: கெங்கவல்லி, வீரகனூர் பகுதியில் சுவேத நதி படுகையில், மணல் கொள்ளை அதிகரித்துள்ளது. வீரகனூர் வழியாக பெரம்பலூர் மாவட்டத்திற்கும், தலைவாசல் வழியாக கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு காவிரி ஆற்று மணல் என்ற போர்வையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
சுவேத நதியில் ஆளுங்கட்சியினரின் ஆசியோடு, மணல் கடத்தல் ஜரூராக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து வருவாய்த்துறையினரிடம் புகார் தெரிவித்தால், கண் துடைப்பிற்காக உள்ளூரில் வீடு கட்டுபவர்கள் மற்றும் மாட்டு வண்டிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். பெருமளவில் மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களை கண்டு கொள்வதேயில்லை. உள்ளூர் போலீசாரை கைக்குள் போட்டுக்கொண்டு, மணல் கடத்தல் அதிகரித்துள்ளது.