மரக்காணம், அக். 18: குடும்ப பிரச்னையில் தாய், 2 மகள் விஷம் குடித்தனர். இதில் பிளஸ் 2 படிக்கும் மூத்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே செட்டிக்குப்பம் கிராமம் ஈஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்தவர் குமார்(43), விவசாயி. இவரது மனைவி கவிதா(38). இவர்களுக்கு பிளஸ் 2 படிக்கும் மகாலட்சுமி(17), 10ம் வகுப்பு படிக்கும் கோமதி(14) என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். குமாருக்கும், அவரது மனைவி கவிதாவுக்கும் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கவிதா மற்றும் அவரது 2 மகள்கள் அன்றைய தினம் இரவு விவசாயத்துக்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளனர். மறுநாள் காலையில் யாரும் எழுந்திருக்காததால் சந்தேகம் அடைந்த குமார் சென்று பார்த்தபோது மனைவி மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.