வேளாண் அலுவலர்களுக்கு உத்தரவு தா.பழூர் அருகே விரிவாக்க அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி

தா.பழூர், அக்.18: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் அரியலூர் ஒன்றிய வேளாண்மை துறை தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றிய விரிவாக்க அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. வேளாண் இணை இயக்குனர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற பயிற்சியில் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் முனைவர் அழகுகண்ணன் பயிற்சியின் நோக்கம் பற்றி விரிவாக கூறினார். அரியலூர் ஒன்றிய வேளாண் உதவி இயக்குனர் (பொ) சவிதா வரவேற்று பேசினார். இப்பயிற்சியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ராஜாஜோஸ்லின், அசோக்குமார், திருமலைவாசன், கார்த்திக் ஆகியோர் ஒருங்கிணைந்த பண்ணையம் அவற்றின் முக்கியத்துவம், சாகுபடி குறிப்புகள், ஆடு, மாடு, கோழி வளர்ப்பு முறைகள், தீவனப்பயிர் சாகுபடி முறைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர். இப்பயிற்சியில் 20 வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கிரீடு வேளாண் அறிவியல் மைய வேளாண் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநர் ராஜ்கலா நன்றி கூறினார்.

Related Stories: