புதுச்சேரி, அக். 16: பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாக வனப்பாதுகாவலர் தினேஷ் கண்ணன் மீது பெண் துணை வனப்பாதுகாவலர் புகார் கொடுத்திருப்பது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி வனத்துறையில் துணை வனப் பாதுகாவலராக வஞ்சுளவள்ளி பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஆண்டு அந்தமான் நிக்கோபாரிலிருந்து இடமாறுதலில் புதுச்சேரிக்கு வந்தார். இதற்கிடையே வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளராக தினேஷ் கண்ணன் அண்மையில் பொறுப்பேற்றார். இந்நிலையில் வனப்பாதுகாவலர் தினேஷ்கண்ணன் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக உருளையன்பேட்டை காவல்நிலையத்தில் வஞ்சுளவள்ளி புகார் கொடுத்தார். அதில், கொரோனா காலத்தில் அருணாசலபிரதேசத்தில் இருந்து வந்தபோதும், தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளாமல் அலுவலகம் வந்தார். எனது தனிப்பட்ட குடும்ப விஷயங்கள் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். தொடர்ந்து மோசமான வார்த்தைகளுடன் பேசத்தொடங்கினார்.