வேலூர், அக்.2:அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் எந்த குழப்பமும் இல்லை என்று வேலூரில் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து மாத நிறைவு விழா கண்காட்சி திறப்பு, ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 962 சுய உதவி குழுக்களுக்கு ₹54.24 கோடி கடன் வழங்குதல், தாட்கோ மூலம் 17 பயனாளிகளுக்கு தலா ₹20 ஆயிரம் வீதம் ₹3.40 லட்சம் நிதியுதவி வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன் வரவேற்றார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் கோமதி திட்ட விளக்கவுரையாற்றினார். ஆவின் தலைவர் வேலழகன், வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராமு, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஜெயபிரகாஷ், வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ஆனந்தன் வாழ்த்துரை வழங்கினர்.