பொள்ளாச்சி, அக். 1: பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி முதல், கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. இதில் கடந்த இரண்டு மாதமாக சராசரியாக தினமும் 10க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3 மாதங்களில், 228 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் 147 பேர் டிஸ்சார்ஸ் ஆகியுள்ளனர். 60 பேர் சிறப்பு வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். கிராமப்புறங்களைவிட நகர் பகுதியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தனிக்கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.