கோவையில் விதிகளை மீறி மின் இணைப்பு உதவி மின் பொறியாளர் இடமாற்றம்

கோவை, செப். 26:  கோவையில் விதிகளை மீறி மின் இணைப்பு வழங்கிய புகாரை அடுத்து  பொன்னையராஜபுரம் உதவி மின்பொறியாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகர் வட்டம் மையக்கோட்டம் பொன்னையராஜபுரம் பிரிவு அலுவலகத்தின் மூலமாக கோவை மாநகராட்சி ஆணையர் பெயரில் வார்டு எண் 78, கல்லாமேடு சாலை, செல்வபுரம் என்ற முகவரியில் உள்ள ஆழ்துளை குழாய்  கிணற்றுக்காக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த மின் இணைப்பானது எந்தவித விண்ணப்பமும் பெறாமலும், பதிவு செய்யப்படாமலும் பொன்னையராஜபுரம் பிரிவு அலுவலகத்திலிருந்து செல்வபுரம் பிரிவு அலுவலகத்தின் மின் மாற்றி மூலம் மின் இணைப்பும், மின்மானி இடமாற்றமும் செய்யப்பட்டுள்ளது. ஒரு பிரிவு அலுவலகத்தில் இருந்து வேறு பிரிவு அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட வேண்டுமெனில் சம்பந்தபட்ட மையக்கோட்ட செயற்பொறியாளர் அனுமதி பெற வேண்டுமென்ற விதி உள்ளது. இந்த விதியை மீறி மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலர் லோகு சென்னையிலுள்ள மின்வாரிய தலைவர் மற்றும் மின் பகிர்மான இயக்குனர் ஆகியோருக்கு விரிவான புகார் மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, தற்போது கோவை மாநகர் வட்ட மேற்பார்வை பொறியாளர் விசாரணை அலுவலர் நியமிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், விதிமீறி மின் இணைப்பு வழங்கப்பட்டது உறுதி செய்யபட்டதால் பொன்னையராஜபுரம் உதவி மின் பொறியாளர் மீது வாரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர் ஒண்டிப்புதூர் கோட்டத்திற்கு உட்பட்ட பீடம்பள்ளி துணை மின் நிலையத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  அவருக்கு ஒருவருட சம்பளம் உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: