ஐகோர்ட் கிளை எதிரே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி

மதுரை, ஆக. 22:  மதுரையில் ஐகோர்ட் கிளை எதிரே உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.  மதுரை-மேலூர் மெயின் ரோடு உலகநேரியில் ஐகோர்ட் கிளை எதிரே தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம்,மில் நேற்று முன்தினம் இரவு 2 பேர் புகுந்து இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றுள்ளனர். அப்போது அங்கு பணம் எடுக்க ஒருவர் வந்துள்ளார். அவரை பார்த்ததும், திருடர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

 ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு, பணம் எடுக்க வந்த நபர், கூச்சலிட்டபடி வெளியில் வந்து, சாலையில் சென்று கொண்டிருந்தவர்களிடம் தெரிவித்தார். இதன்பேரில், பொதுமக்கள் சிலர் டூவீலர்களில் விரட்டிச் சென்று, திருடர்கள் இருவரையும் பிடித்து ஒத்தக்கடை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘சிக்கியவர்கள் மதுரை வரிச்சியூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் தான் திருட முயன்றனரா என்பது குறித்து இங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காமிராவின் பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறோம். சம்பவத்தில் ஈடுபட்டது இவர்கள் 2 பேர் மட்டுமா, வேறு நபர்கள் ஈடுபட்டனரா என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம்’’ என்றனர்.

Related Stories: