ஊட்டி,ஆக.22: நீலகிரி மாவட்டத்திற்கான நடப்பு நிதியாண்டிற்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ.3,475 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் வங்கியாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்து மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம் நடப்பு ஆண்டிற்கு உருவாக்கப்பட்டுள்ள கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார். தொடர்ந்து அவர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் நமது மாவட்ட முன்னோடி வங்கி மூலம் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கடன் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. மேலும் ஆண்டுதோறும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் மூலம் விவசாயிகளுக்கு பயிர்கடன், நகைக்கடன் உள்ளிட்ட கடனுதவிகளும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பல்வேறு கடனுதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.