தேவாரம், மார்ச் 18: கோடைகாலம் தொடங்க உள்ள நிலையில், உத்தமபாளையம் ஒன்றிய கிராமங்களில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டால், அதை சமாளிக்க ஆய்வு நடந்து வருகிறது. கிராமங்களில் குடிநீர் பிரச்னை குறித்து தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 13 கிராமங்கள் உள்ளன. இதில், பெரும்பாலான கிராமங்களுக்கு பெரியாற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், தேவாரம் பகுதியைச் சுற்றிலும் உள்ள பெரும்பாலான கிராமங்களில் போர்வெல் மூலம் குடிநீர் விநியோகம் செய்கின்றனர். கோடைகாலம் தொடங்க உள்ள நிலையில், கிராமங்களில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் கிடைக்க என்னனென்ன வசதிகள் செய்ய வேண்டும். கிராமந்தோறும் எவ்வளவு மக்கள் வாழ்கிறார்கள், குடிநீர் வராத காலங்களில் மாற்றுவழி என்ன ஆகியவை குறித்து அறிக்கை வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் கேட்டுள்ளார்.